×

லாரியில் சமைத்தபோது சிலிண்டர் வெடித்து தீவிபத்து: இருவர் கவலைக்கிடம்

 

பூந்தமல்லி: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரியில் சமைத்தபோது, காஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி சுங்கசாவடி அருகே நேற்று மாலை கன்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் விஜயகுமார் (47) மற்றும் கிளீனர் விஜயகுமார் (40) ஆகிய இருவரும் லாரியின் முன் பகுதியில், டிரைவர் சீட்டுக்கு அருகே அமர்ந்து சிறிய காஸ் சிலிண்டரில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து லாரி தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதில், டிரைவர், கிளீனர் மீதும் தீ பரவியது. படுகாயமடைந்த இருவரும் லாரியில் இருந்து இறங்கி அலறி அடித்தவாறு ஓடி வந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நசரத்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் சரவணன், இளங்கோ, ஞானசேகர் ஆகியோர், பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை.இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post லாரியில் சமைத்தபோது சிலிண்டர் வெடித்து தீவிபத்து: இருவர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Vandalur-Meenjoor ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ